×

குருப்-4 தேர்வு அறிவிப்பாணைக்கு தடைக்கோரி வழக்கு: டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு

சென்னை: குரூப்-4 தேர்வு அறிவிப்புக்கு தடை கோரிய வழக்கில் ஜூன் 26ம் தேதிக்குள் பதில் அளிக்க டி.என்.பி.எஸ்.சி-க்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. குரூப் -4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை டி.என்.பி.எஸ்.சி இந்து வெளியிட்டது. மொத்தம் 6,491 பணியிடங்களுக்கான முழு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், டி.என்.பி.சி. குரூப்-4 தேர்வு அறிவிப்புக்கு தடைக்கோரி மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் எனபவர் வழக்கு தொடர்ந்தார். அதில், தமிழ்நாடு தேர்வாணைய கழகம் ஏற்கனவே குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்று பணிநியமனத்துக்காக காத்திருப்போர் பட்டியலில் ஏராளமானோர் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 2013ம் ஆண்டில் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சிலர் பணிகளில் சேராத காரணத்தால் சுமார் 500 பணியிடங்கள் காலியாக இருந்தது. மேலும், அந்த பணியிடங்களை காத்திருப்போர் பட்டியல் கொண்டு நிரப்பாமல், தற்போது புதிதாக குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பாணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

எனவே, இந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் 2013ம் ஆண்டில் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களை கொண்டு பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், அதன் பிறகு மீதமுள்ள பணியிடங்களுக்கு தேர்வை புதிதாக நடத்தவேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். 2013ம் ஆண்டின் காத்திருப்போர் பட்டியல் உள்ள நிலையில் தேர்வாணையம் அறிவிப்பாணையை வெளியிட்டது சட்டவிரோதமானது எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் மற்றும் நிர்வாக துணை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக பதில் தர ஜூன் 26ம் தேதி கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Tags : Kurup-4 , Kurupp-4 Selection, Announcement, Case, TNPCC, HCC Branch
× RELATED மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற...